மோகனூர் அருகேமது போதையில் தொழிலாளி அடித்துக்கொலைதங்கை கைது


மோகனூர் அருகேமது போதையில் தொழிலாளி அடித்துக்கொலைதங்கை கைது
x
தினத்தந்தி 4 Sep 2023 7:00 PM GMT (Updated: 4 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே மது போதையில் தொழிலாளியை அடித்துக்கொன்ற தங்கை கைது செய்யப்பட்டார்.

மது குடிக்கும் பழக்கம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கொமாரபாளையம் ஊராட்சி கீழ் பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி வரதம்மாள். செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (வயது 55) என்ற மகனும், சியாமளா (48) என்ற மகளும் இருந்தனர். கூலித்தொழிலாளியான பாண்டியனுக்கு திருமணமாகி 2 மனைவிகளுடன் மணப்பள்ளி பகுதியில் வசித்து வந்தார். சியாமளாவிற்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வரதம்மாள் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் வரதம்மாள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாண்டியன் கீழ்பாலப்பட்டிக்கு வந்து தாயாரின் இறுதிசடங்கு செய்து, 40 நாட்கள் விசேஷம் கழிப்பதற்காக தங்கை வீட்டில் இருந்து வந்தார். மேலும் அண்ணன், தங்கை இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தாய் இறந்த நாளில் இருந்து அடிக்கடி இருவரும் ஒன்றாக மது குடித்து வந்தார்களாம்.

அடித்துக்கொலை

அதன்படி நேற்றும் அண்ணன், தங்கை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது மது போதையில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து போதையில் பாண்டியன் தூங்கி விட்டாராம். எனினும் ஆத்திரத்தில் இருந்த சியாமளா வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் இரும்பு குழலால் பாண்டியனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து சியாமளா, பாண்டியன் மகன் தனபாலுக்கு உனது தந்தை கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பதறியறித்து கொண்டு தனபால் கீழ் பாலப்பட்டிக்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். தலையில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

பரபரப்பு

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்ற சியாமளாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுபோதையில் அண்ணனை தங்கையே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story