புதுச்சத்திரம் அருகே வக்கீலை தாக்கிய சகோதரர்கள் கைது


புதுச்சத்திரம் அருகே   வக்கீலை தாக்கிய சகோதரர்கள் கைது
x

புதுச்சத்திரம் அருகே வக்கீலை தாக்கிய சகோதரர்கள் கைது

நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு ரங்கசாமி (வயது 45), லோகநாதன் (39) என 2 மகன்கள் உள்ளனர். இவருக்கும் மின்னாம்பள்ளியை சேர்ந்த விஜயகுமார் குடும்பத்தினருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார், வக்கீல் கணேசன், சுந்தரவடிவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் ராமநாயக்கன்பட்டிக்கு சென்று நிலத்தை காலி செய்து தரும்படி ரங்கசாமி குடும்பத்தினரிடம் கேட்டு உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் வக்கீல் கணேசன், விஜயகுமார் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ரங்கசாமி குடும்பத்தினரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வக்கீல் கணேசன் மற்றும் ரங்கசாமி ஆகியோர் புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். வக்கீல் கணேசன் புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியின் மகன்களான ரங்கசாமி (45), லோகநாதன் (39) ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே வக்கீல் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story