மோகனூர் அருகே பெண்களை சாதி பெயர் சொல்லி திட்டி தாக்கிய 4 பேர் கைது


மோகனூர் அருகே  பெண்களை சாதி பெயர் சொல்லி திட்டி தாக்கிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே பெரம்மாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மோளக்கவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சரவணன். இவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை தனது மகன் காதலித்தது தொடர்பான பிரச்சினையில் மோகனூர் போலீஸ் நிலையத்தில் போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்களை கடந்த மாதம் 9-ந் தேதி அழைத்து பேசி எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அதிகாலை முதல் தனது மகனை காணவில்லை. அவரை தேடி சென்றபோது தனது வீட்டுக்கு வந்த ஆமைப்பாறை பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் சேது மற்றும் சிலர் வீட்டில் இருந்த தனது அத்தை சுலோச்சனா, தங்கை கவுசல்யா ஆகியோரை அடித்து உதைத்ததுடன், மனைவி சுமதியை தாக்கி சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பூர்ணிமா வழக்குப்பதிவு செய்து சரவணன் வீட்டுக்கு சென்று தகராறு செய்த சேதுபதி என்ற சேது (வயது 20), பெரியசாமி மகன் ராமச்சந்திரன் (22), நடராஜன் மகன் சுரேஷ் (29), சுப்பிரமணி மகன் மஞ்சுநாதன் (48) ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் இளங்கோ, நந்தகுமார், சரவணன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.


Next Story