அரூர் அருகேசிறுமியை கர்ப்பமாக்கிய சிறை வார்டர் மீது போக்சோவில் வழக்கு


அரூர் அருகேசிறுமியை கர்ப்பமாக்கிய சிறை வார்டர் மீது போக்சோவில் வழக்கு
x
தினத்தந்தி 24 April 2023 7:00 PM GMT (Updated: 24 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக சிறை வார்டர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி கர்ப்பம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியின் பெற்றோர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் படித்து வந்தார். இந்த நிலையில் அண்மையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஊருக்கு வந்த சிறுமியின் தாய், சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றார். டாக்டர் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பலாத்காரம்

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதே பகுதியை சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (வயது 30) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி இருப்பதும் தெரியவந்தது. லெனின்குமார் குன்னூரில் சிறை வார்டராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

போக்சோ வழக்கு

இதுதொடர்பாக சிறுமியின் தாய் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சிறை வார்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

========


Next Story