பாலக்கோடு அருகேதகராறில் விவசாயியை கொடுவாளால் வெட்டிய தந்தை, மகன் கைது


பாலக்கோடு அருகேதகராறில் விவசாயியை கொடுவாளால் வெட்டிய தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 30 April 2023 7:00 PM GMT (Updated: 30 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள கல்கூடபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு குப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால் இவரது நிலத்தில் இருந்த தேக்கு மரம் சாய்ந்து அருகில் காண்டீபன் என்பவரது நிலத்தில் விழுந்தது. இதனால் காண்டீபன் தேக்கு மரத்தை வெட்டி எடுத்து சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு மரம் சரிந்து காண்டீபன் நிலத்தில் விழுந்தது. அதனை வெட்ட சென்ற சக்திவேலுக்கும், கான்டீபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காண்டீபனுக்கு ஆதரவாக அவருடைய மகன்கள் பார்த்திபன், அனந்தராமன் ஆகியோர் சக்திவேவிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் காண்டீபன் மற்றும் அவரது மகன்கள் கொடுவாளால் சக்திவேலை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சக்திவேலை அவரது குடும்பத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்டீபன், அனந்தராமன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான பார்த்திபனை தேடி வருகின்றனர்.


Next Story