அரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கில் சிறை வார்டர் கைது


அரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கில் சிறை வார்டர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2023 7:00 PM GMT (Updated: 14 Jun 2023 6:32 AM GMT)
தர்மபுரி

அரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குன்னூர் சிறை வார்டரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அந்த மாணவியின் பெற்றோர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். மாணவி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தாள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஊருக்கு வந்த மாணவியின் தாய், மகளை டாக்டரிடம் அழைத்து சென்றார்.

டாக்டர் பரிசோதித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் குடும்பத்தினர் இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.

சிறை வார்டர் கைது

அப்போது அதே பகுதியை சேர்ந்த லெனின்குமார் (வயது 30) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து அது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று அவரை மிரட்டி இருப்பதும் தெரிந்தது. லெனின்குமார் குன்னூரில் சிறை வார்டராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லெனின் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.

மேலும் லெனின்குமாரை விரைவாக கைது செய்ய வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சிறை வார்டர் லெனின்குமாரை அரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


Next Story