குழந்தை விற்க முயன்ற விவகாரத்தில்மேலும் ஒரு புரோக்கர் கைது


குழந்தை விற்க முயன்ற விவகாரத்தில்மேலும் ஒரு புரோக்கர் கைது
x

திருச்செங்கோட்டில் குழந்தை விற்க முயன்ற விவகாரத்தில் மேலும் ஒரு புரோக்கரை போலீசார் கைது செய்தனா்.

நாமக்கல்

திருச்செங்கோடு

குழந்தைகள் விற்பனை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்-நாகஜோதி தம்பதிக்கு கடந்த 12-ந் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டராக அனுராதா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள் (வயது38) என்பவர் மூலம் ரூ.2 லட்சம் தருவதாக தினேஷ், அவரது மனைவி நாகஜோதியிடம் பேரம் பேசி பச்சிளம் குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் வழக்குப்பதிவு செய்து டாக்டர் அனுராதா, குழந்தைகள் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவின்பேரில் டாக்டர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் ஒரு புரோக்கர் கைது

இதைத்தொடர்ந்து குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் நிறைய புரோக்கர்களுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் புரோக்கர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குமாரபாளையம் பகுதியை சேர்ந்த இடைத்தரகர் பாலாமணி(41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம், யாருக்கெல்லாம் குழந்தைகள் விற்பனை நடைபெற்றது, உடல் உறுப்புகள் விற்பனை குறித்தும், பாலாமணியுடன் மேலும் தொடர்பில் உள்ள கும்பல் குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு தனிப்படையினர் சேலம் மற்றும் கரூர் பகுதிகளில் உள்ள இடைத்தரகர்களை பிடிக்க விரைந்துள்ளனர்.


Next Story