வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்டு


வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்டு
x

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு 'நீட்' தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனிதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, சுடுகாடு வரை சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதனால் 'நீட்' எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எதிரொலித்தது. இதில் குழுமூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்பட பல்வேறு அமைப்புகள் மீது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கவுதமன் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உத்தரவிட்டார்.

தற்போது தி.மு.க. அரசு தொடர்ந்து 'நீட்' எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பழைய வழக்கில் இயக்குனர் கவுதமனுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது, 'நீட்' எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story