கிணற்றில் குதித்து உதவி பேராசிரியை தற்கொலை


கிணற்றில் குதித்து உதவி பேராசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2023 7:30 PM GMT (Updated: 17 Jan 2023 7:30 PM GMT)

பரமத்திவேலூர் அருகே கிணற்றில் குதித்து உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் அருகே கிணற்றில் குதித்து உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி பேராசிரியை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). இவர், புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தேவிப்பிரியா (32). இவர், நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. தேவிப்பிரியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாராம்.

தற்கொலை

நேற்று முன்தினம் மாத்திரை சாப்பிடவில்லை எனக்கூறி தேவிப்பிரியாவை, அவருடைய கணவர் ஸ்ரீதர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த தேவிப்பிரியா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தேவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தேவிப்பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேவிப்பிரியா தற்கொலைக்கான காரணம் உடனே தெரியவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தற்கொலை செய்த உதவி பேராசிரியைக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story