அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையத்தில் 39 அடி உயர பைரவர் கோவில் கும்பாபிஷேகம்


அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையத்தில்  39 அடி உயர பைரவர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 21 Nov 2022 7:30 PM GMT (Updated: 21 Nov 2022 7:30 PM GMT)

பைரவர் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையத்தில் 39 அடி உயரத்தில் பைரவர் சிலை கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி நடக்கிறது.

39 அடி உயர பைரவர்

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் பைரவர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள இந்த கோவிலில் 39 அடி உயரத்தில் பைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளதாக ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி விஜயசாமிகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் பிரமாண்டமான வகையில் பைரவர் கோவில் கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. உலகிலேயே எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது, 39 அடி உயர காலபைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது.

சாதனை புத்தகத்தில் இடம்

இந்த சிலை யுனிக்யூ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கோவிலின் திருப்பணி 7 வருடங்களாக பல குருமார்களின் ஆசியோடு நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும், நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

இதையொட்டி 10.3.2023-ந் தேதி மாசி மாதம் 26-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொதுமக்களால் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பிறகு முதற்கால பூஜை தொடங்கப்படுகிறது.

கும்பாபிஷேகம்

மதியம் 2.30 மணிக்கு அவல்பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொதுமக்களால் தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை கிராமிய நிகழ்ச்சி மற்றும் வாண வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் 28-ம் நாள் (12.3.2023) காலை 10 மணிக்கு 2-ம் கால பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா நடைபெறும்.

13.3.2023-ந் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு 4-ம் கால பூஜை மற்றும் 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

10.3.2023-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் 13.3.2023-ந் தேதி திங்கட்கிழமை வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுகோள்களை 98425 99006 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story