உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு


உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 10:10 AM GMT)

உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

உடன்குடியில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை பிரசித்தி பெற்றது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம்.

உடன்குடி வாரச்சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், இஞ்சி ரூ.240-க்கும், மிளகாய் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வரத்து குறைவு

மேலும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும், அவரைக்காய், பீன்ஸ் தலா ரூ.100-க்கும், குடைமிளகாய் ரூ.85-க்கும், கேரட் ரூ.75-க்கும் விற்பனையானது. இதேபோன்று பல்வேறு காய்கறிகளும் விலை உயர்ந்தே காணப்பட்டது.

கடந்த வாரத்தை விட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாகவும், காய்கறிகளின் வரத்து அதிகரித்தால்தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story