அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்


அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
x

அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

3 சதவீத இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பில் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகோ பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். சர்வதேச போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள்), கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.

காமன்வெல்த் சாம்பியன்ஷிப்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை ஐ.ஓ.சி.-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.எப்.-இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஐ.ஓ.சி.-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.எப்.-இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள். சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.

தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள் மட்டும்), தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள். மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் (வெற்றி பெற்றவர்கள் மட்டும்), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகியவை மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதள முகவரியில் (www.sdat.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story