பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகள்


பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகளில் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர்.

பெரம்பலூர்

தடகள போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது.

ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வீராங்கனைகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. முதல் 2 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தேவி, உடற்கல்வி ஆசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இதேபோல் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


Next Story