ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 18 Jun 2023 9:22 PM GMT (Updated: 19 Jun 2023 8:49 AM GMT)

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

திருச்சி

ஏ.டி.எம். மையம்

திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியையொட்டி அதன் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மையம் என்பதால் பகல்நேரத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த மையத்தில் பணம் எடுத்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் இந்த ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

கொள்ளை முயற்சி

ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரும் டிரே வழியாக கடப்பாரையை விட்டு குத்தி பெயர்த்துள்ளனர். நீண்டநேரம் முயற்சித்தும் அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதற்கிடையே இரவு ரோந்து போலீசார் ஏ.டி.எம். மையம் அமைந்து இருந்த பகுதி வழியாக வந்தனர்.

போலீசார் வருவதை நோட்டமிட்ட அந்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். ரோந்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பார்த்தபோது, அங்கு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

கேமரா காட்சிகள் ஆய்வு

ரோந்து போலீசார் உடனடியாக இதுகுறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, கொள்ளையடிக்க முயற்சித்தது யார்? என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது

உரிய நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது. போலீசாரின் விசாரணைக்கு பிறகு ஏ.டி.எம். மையத்தை அதிகாரிகள் பூட்டி சென்றனர்.

இந்த சம்பவம் கருமண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story