ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சி வழக்கில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கைது


ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சி வழக்கில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கைது
x

ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சி வழக்கில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

கொள்ளை முயற்சி

காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம் பஜாரில் தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்மநபர் கொள்ளையடிக்க முயன்றார். ஏ.டி.எம். எந்திரத்தை ஸ்குரூ டிரைவரை வைத்து கழற்றி கொண்டிருக்கும் போது பொதுமக்கள் வருவதை கண்டு தப்பிச்சென்றுவிட்டார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஏ.டி.எம்.எந்திரத்தை சோதனை செய்ததில் மேல் பாகம் மட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். பணம் இருக்கும் இடம் எதுவும் உடைக்கப்படவில்லை. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் தப்பியது.

கைது

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாலுசெட்டிசத்திரம் அருகில் உள்ள கிராமமான முசரவாக்கத்தை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் யுவராஜ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார். அவரை காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.


Next Story