காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்


காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 5 July 2023 6:24 PM GMT (Updated: 6 July 2023 9:39 AM GMT)

குடியாத்தத்தில் காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் தாக்கினார். இதனால் அவமானம் தாங்காமல் கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்த மாணவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர்

காதலிக்க வற்புறுத்தி தாக்குதல்

குடியாத்தம் டவுன் கொசண்ணாமலை தெருவை சேர்ந்தவர் சரவணன். ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சந்துரு (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மாணவியை வழிமறித்த சந்துரு காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த மாணவிக்கும், சந்துருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்து சந்துரு சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியை காதலிக்க வற்புறுத்தி சரமாரியாக தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது.

திரவத்தை குடித்தார்

இதனால் வீட்டிற்கு வந்த மாணவி அழுது கொண்டே இருந்துள்ளார். சக மாணவ- மாணவிகள் முன் தன்னை அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த அந்த மாணவி நேற்று காலையில் கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்த பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், மாணவியை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இருதயராஜ் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story