தூத்துக்குடியில்மினிபஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்


தூத்துக்குடியில்மினிபஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில்மினிபஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மினிபஸ் டிரைவர், கண்டக்டரை இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது ெசய்தனர். அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

தாக்குதல்

தூத்துக்குடி தாளமுத்துநகர் மேலஅழகாபுரியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 23). மினிபஸ் டிரைவர். இவரது சகோதரர் அய்யப்பன் நடத்துனராக உள்ளார். இவர்கள் 2 பேரும் ஒரே மினிபஸ்சில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் மினிபஸ்சை சாகிர் உசேன் நகர் பகுதியில் ஓட்டி சென்றனர். அங்கு உள்ள நிறுத்தத்தில் ஆட்களை இறக்கி விட்டனர். அப்போது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ஜார்ஜ் என்ற ஜார்ஜ் ராஜா (28), அவரது நண்பர்கள் சேர்ந்து வேல்முருகனிடமும், அய்யப்பனிடமும் மினிபஸ்சை வழிமறித்து தகராறு செய்து உள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் வேல்முருகனையும், அய்யப்பனையும் 2 பேரையும் அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

வாலிபர் சிக்கினார்

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்கு பதிவு செய்து ஜார்ஜ் ராஜாவை கைது செய்தார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story