சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
x

சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

சேலம்

எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 46). இவர், அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் வழிப்பாதையை சிலர் அடைத்து வைத்திருப்பதாகவும், இதனால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் சரவணகுமார் கூறுகையில், சித்தூர் கிராமத்தில் நாங்கள் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகிறோம். எங்களது வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தை அதே பகுதியில் வசிக்கும் சிலர் அடைத்துவிட்டனர். இதனால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் 5 நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம். இதுதொடர்பாக உதவி கலெக்டர், போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் என்பதால் அவர்களை மீறி ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டுகின்றனர். எனவே, வீடுகளுக்கு செல்ல வழிப்பாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என்றனர்.


Next Story