வீட்டின் கதவை தட்டி கொள்ளையடிக்க முயற்சி?


வீட்டின் கதவை தட்டி கொள்ளையடிக்க முயற்சி?
x

வீட்டின் கதவை தட்டி கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

திருச்சி

திருச்சி கே.கே.நகர் ராணிமங்கம்மாள் சாலையில் ஏராளமான குறுக்குத்தெருக்கள் உள்ளன. அங்குள்ள பட்டேல் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள் ஒரு வீட்டின் ஹாலிங் பெல்லை அடித்துள்ளனர். பலமுறை அடித்தும் கதவை திறக்காததால் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே வந்து கதவை தட்டியுள்ளனர். அந்த வீட்டில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து கதவை திறக்கவில்லை. வீட்டிற்குள் இருந்தபடியே யார்? என்று கேட்டுள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

பின்னர் 5 நிமிடம் கழித்து மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டில் உள்ளவர்கள் உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே உறவினர்கள் கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து கூறி உள்ளனர். ஆனால் நீண்டநேரமாகியும் அங்கு போலீசார் பாதுகாப்புக்கு வரவில்லை.

இதையடுத்து மீண்டும் உறவினர்களுக்கு போன் செய்து தகவலை சொல்ல, அவர்களே அங்கு புறப்பட்டு வந்துள்ளனர். அதன்பிறகே வீட்டில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே துணிச்சலாக கதவை தட்டி கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது தெரியவந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் ரோந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story