8 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


8 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு 8 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு 8 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு, வீரப்பன் நகர் 4-வது கிராசை சேர்ந்த மோகன், சையது, சாந்தி, குல்ஜார், மலர்கொடி உள்ளிட்ட 7 குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்கமுயன்றனர்.

அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தில் 11 குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகிறோம்.

சிலர் எங்களை அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி உடனடியாக காலி செய்யுமாறும் கூறுகின்றனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முறையிட்டோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றோம் என்றனர்.

பொதுவழிப்பாதை

அதேபோல பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ரம்யா தம்பதி தங்களது 2 மகள்கள் மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது தங்களது தென்னந்தோப்பிற்கு செல்லும் பொதுவழிப்பாதையை அபகரிக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினர்.

இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story