பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி


பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி
x

முத்துப்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை முயற்சி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது30). இவரது கணவர் சஞ்சய் காந்தி. இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சஞ்சய் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் ஜெயலட்சுமி குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். ஜெயலட்சுமி பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் அவரது மாமனார் வைரக்கண்ணு (82) வந்து தங்குவது வழக்கம்.நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கு ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று உள்ளே புகுந்த முகமூடி அணிந்து இருந்த கொள்ளையர்கள் 4 பேர் ஜெயலட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை பறித்தனர். இதனை பார்த்த வைரக்கண்ணு தடுக்க முயன்றபோது, அவரை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர்.

தப்பி ஓட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த வைரக்கண்ணு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை தாக்க முயன்றார். இதனால் கொள்ளையர்கள் பறித்த நகைகளை அங்கேயே விட்டுவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருவாரூர் சரவணன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எடையூர் ஆனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், புஷ்ப நாதன், குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன், மோகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பல இடங்களில் கொள்ளையர்களை தேடினர்.

4 பேர் கைது

இந்தநிலையில் நேற்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருத்துறைப்பூண்டிைய அடுத்த கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரவீன் குமார் (26), அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் ராஜேஷ் (22), விளத்தூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக்ராஜா, கச்சனம் பகுதியை சேர்ந்த பேரின்பன் மகன் சினநேசன் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story