மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் 19,20,21-ந் தேதிகளில் நடக்கிறது


மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் 19,20,21-ந் தேதிகளில் நடக்கிறது
x

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 19,20,21-ந் தேதிகளில் ஏலம் விடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 394 இருசக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கர வாகனங்கள், 26, 4 சக்கர வாகனங்கள், ஒரு ஆறு சக்கர வாகனத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களில் காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 431 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முன்வைப்பு கட்டண தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1000, 3 சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவீதம், 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனடியாக செலுத்தி விட வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவு சான்று (ஆர்.சி புத்தகம்) ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்பு கட்டண தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story