ஆடி மாத பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்


ஆடி மாத பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.50 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு அடைகிறது. பின்னர் 2-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு சென்றடையும்.

மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடையும். பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு,விழுப்புரம் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரெயில்நிலையத்தை இரவு 10.45 மணிக்கு சென்றடையும். பின்னர் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து ஆக. 2-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வேலூர் வழியாக சென்னை கடற்கரைக்கும், விழுப்புரம் வழியாக தாம்பரம் மற்றும் மயிலாடுதுறைக்கும் பயணிக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story