இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1000 காளைகள், 800 வீரர்கள் பங்கேற்க அனுமதி


இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1000 காளைகள், 800 வீரர்கள் பங்கேற்க அனுமதி
x
தினத்தந்தி 14 Jan 2024 9:30 PM GMT (Updated: 14 Jan 2024 9:30 PM GMT)

இன்று காலை 5 மணியில் இருந்து காளைகள் மற்றும் மாடு பிடி வீர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி தொடங்குகிறது.

மதுரை,

காளையர்களை தெறிக்கவிடும் காளைகளும், திமிலுடன் சீறிவரும் காளைகளுக்கு திமிருடன் பதிலடி கொடுக்கும் காளையர்களாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் தொடங்க இருக்கிறது. இன்றைய தினம் மதுரை அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அமர்க்களப்படுத்தப் போகிறது.

அவனியாரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மொத்தம் 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு நேற்று டோக்கன் வழங்கப்பட்டன. டோக்கன் அனுமதி இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று காலை 5 மணியில் இருந்து காளைகள் மற்றும் மாடு பிடி வீர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி தொடங்குகிறது. அவனியாபுரத்தில் வாடிவாசல், பார்வையாளர் மாடம், கேலரி அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளன. வாடிவாசலில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பப்பட்டு உள்ளது.

அவனியாபுரத்தில் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை இரு புறங்களிலும் தென்னைமர கட்டைகளால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று பகலில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் காளைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வாடிவாசல் பின்புறமாக நீண்ட வரிசையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளால் அவனியாபுரம் களைகட்டி இருந்தது.


Next Story