உத்தமர் காந்தி விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


உத்தமர் காந்தி விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உத்தமர் காந்தி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உத்தமர் காந்தி விருது

கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு 2022-ம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி விருது மீண்டும் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளையும் விருதுக்காக மதிப்பீடு செய்ய, எனது தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வளாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகியோரை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

5 ஊராட்சிகள் தேர்வு

இந்த குழு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி ஒன்று, மகளிர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி ஒன்று மற்றும் இதர சிறந்த கிராம ஊராட்சிகள் 3 என மொத்தம் 5 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்யும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில், அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட தேர்வுக்குழுவானது மாவட்டங்களிலிருந்து பெறப்படும் முன்மொழிவுகளை பரிசீலனை செய்து மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 கிராம ஊராட்சிகளை விருதிற்காக தேர்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்யும்.

இணையதளத்தில் பதிவு செய்யலாம்

இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் முதல்-அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பரிசுதொகையினை தொடர்புடைய கிராம ஊராட்சிக்கு தேவையான முன்னுரிமை பணிகளை, மாவட்ட கலெக்டரின் நிர்வாக அனுமதியுடன் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

எனவே நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளும் இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இணையதளமான http://tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள படிவத்தினை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிற 17-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story