புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம்: மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்


புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம்: மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2024 11:31 PM GMT (Updated: 13 Jan 2024 3:06 AM GMT)

சென்னை நகரில் போகியன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக இருக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, போகியன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை நகரில் போகியன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக இருக்கிறது.

பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய செயல்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடைேய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

அதன்படி இந்த 2024-ம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போகிப்பண்டிகையின் முந்தையநாள் மற்றும் போகிப்பண்டிகை நாளில் சென்னையில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் காற்றின் தரஅளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story