உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை பெரியகல்லபாடியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாரத்தை சேர்ந்த பெரியகல்லபாடி கிராமத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கும் திட்டம் நிலை-4-ன் கீழ் துரிஞ்சலாறு உபவடி நிலப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தாமஸ் தலைமை தாங்கி விவசாயிகளிடையே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி, உழவர் சந்தையில் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நன்மைகள் மற்றும் தேசிய மின்னணு வேளாண் சந்தை ஆகியவற்றை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் காயத்ரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள், பங்கு தொகை பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் வேளாண்மை துறையில் உள்ள மானிய திட்டங்கள் பற்றியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மணிலா உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பங்குதாராக சேர்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்து கூறினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் பழனி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாபு, களப்பணியாளர்கள் இமையழகன் மற்றும் திருமகள் ஆகியோர் செய்திருந்தனர்.






