குன்றத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி


குன்றத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x

குன்றத்தூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம்

டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மற்றும் குன்றத்தூர் நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கையில் பதாகைகளுடன் ஊர்வலமாக நடந்து சென்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த கோஷங்கள் எழுப்பியவாறு மாணவிகள் நடந்து சென்றனர்.

டெங்கு தடுப்பு பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில் போன்றவை வழங்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியை குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் நகராட்சி கமிஷனர் குமாரி, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story