பி.ஆர்க். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம்


பி.ஆர்க். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம்
x

பி.ஆர்க். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது.

சென்னை,

இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போது பொதுப் பிரிவினருக்கான 2-வது சுற்று கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடக்கிறது.

இந்த நிலையில் பி.ஆர்க். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டு இருக்கிறது.

மொத்தம் 38 கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 609 இடங்களுக்கு இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு 2 ஆயிரத்து 491 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் பொதுப்பிரிவில் ஆயிரத்து 607 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 3 பேரும், விளையாட்டுப்பிரிவில் 22 பேரும், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் 18 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் ஒருவரும் தகுதியானவர்களாக கருதப்பட்டு அவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஏதும் குறைகள் இருக்கும்பட்சத்தில், மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மாணவர் சேர்க்கை சேவை மையத்தை (டி.எப்.சி.) அணுகலாம். அதற்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கலந்தாய்வு 8-ந் தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. 8-ந் தேதியன்று சிறப்பு பிரிவினருக்கும், அதன்பின்னர், பொதுப்பிரிவினருக்கு 9-ந் தேதி முதலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.


Next Story