பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு


பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு
x
தினத்தந்தி 24 Sep 2023 9:15 PM GMT (Updated: 24 Sep 2023 9:15 PM GMT)

சீலக்காம்பட்டி பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டி பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலின் ஓரிடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த விரிசல் வழியாக நீர் கசிந்தது. இதுபற்றி அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சீரமைப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டனர். இதற்கிடையே வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், அதிகாரிகளுடன் நேரில் வந்து சீலக்காம்பட்டி பகுதியில் சீரமைக்கப்பட்ட பி.ஏ.பி. வாய்க்காலை பார்வையிட்டார்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-


திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 94 ஆயிரத்து 68 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். தற்போது அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் வினாடிக்கு 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.


இந்தசூழ்நிலையில் சீலக்காம்பட்டி பகுதியில் உள்ள வாய்க்காலின் ஓரிடத்தில் விரிசல் உண்டாகி நீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து முன்நடவடிக்கையாக முதலில் தண்ணீர் நிறுத்தாமல் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முழுமையாக சீரமைக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நீர் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு பணி முடிந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story