பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு


பக்ரீத் பண்டிகையையொட்டி  பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை  ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை

நாடு முழுவதும் நேற்று தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. நாமக்கல்லில் நேற்று காலையில் சேந்தமங்கலம் சாலையில் உள்ள பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் முன்பு முஸ்லிம்கள் கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தட்டாரத்தெரு, சேலம் சாலை வழியாக ஈத்கா மைதானத்தை அடைந்தனர்.

அங்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனை பேட்டை பள்ளிவாசல் இமாம் சாதிக் பாஷா நடத்தினார். இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இதேபோல் கோட்டை திப்புசுல்தான் பள்ளிவாசல், மாருதி நகர் பள்ளிவாசல் என நகர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதையொட்டி முஸ்லிம்கள் ஏழை, எளியவர்களுக்கு நலஉதவிகள் வழங்கி மகிழ்ந்தனர்.

திருச்செங்கோடு

இதேபோல் திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பகுதிகளில் நேற்று ஈகை திருநாளான பக்ரீத் பண்டிைக கொண்டாடப்பட்டது. அதன்படி திருச்செங்கோட்டில் உள்ள சங்ககிரி சாலை ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. திருச்செங்கோடு டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார். ஹஜ்ரத் ஜலாலுதீன் சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் குழந்தைகள், பெரியவர்கள், வாலிபர்கள் பலர் கட்டிதழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல் கூட்டப்பள்ளி காலனி பாத்திமா பள்ளிவாசல், தொண்டி கரடு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் உலக அமைதி வேண்டியும், மத நல்லிணக்கம் வலுப்பெறவும் கூட்டு தொழுகை நடந்தது குறிப்பிடத்தக்கது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல் முன்பு தொடங்கிய ஊர்வலம் அண்ணா சாலை, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தது. சகன்ஷா அவுலியா தர்கா பள்ளிவாசலின் ஈத்கா மைதானத்தில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் சவான்சாகிப், நிர்வாக கமிட்டி செயலாளர் இக்பால், சகன்ஷா அவுலியா தர்கா பள்ளிவாசல் உறுப்பினர்கள் சலீம், முபாரக், ஆபித், ஜின்னா மற்றும் பள்ளிவாசல் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல் பரமத்தி மற்றும் பாலப்பட்டியிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதேபோல் ராசிபுரம், குமாரபாளையம், கந்தம்பாளையம், பள்ளிபாளையம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

===========


Next Story