காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது-பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது-பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

அரியலூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநிலங்களில் மத கலவரத்தை உண்டாக்கி மக்களை பிரித்து வெற்றி பெற்று விடலாம் என பா.ஜனதா நினைக்கிறது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் முக்கிய குறிக்கோளாகும்.

தமிழ்நாட்டு மக்களிடையே 'நீட்' தேர்வு கூடாது என்று எண்ணம் பரவி உள்ளது. இது அரசியல் சார்பான பிரச்சினை அல்ல. தமிழ்நாடு மக்களின் பிரச்சினையாக உள்ளது. 'நீட்' தேர்விற்கு எதிராக ஆளுகின்ற தி.மு.க. அரசே கடுமையாக பாடுபட்டு வருகிறது. பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் 'நீட்' தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என பா.ஜனதாவை நிர்பந்தம் செய்யலாம். ஆனால் அது குறித்து எதுவும் தெரிவிக்காது வருத்தம் அளிக்கிறது. காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு காவிரியில் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. மத்திய அரசை கண்டித்து 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மறியல் போராட்டம் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி நடக்கிறது. இந்த போராட்டம் அரியலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story