நெல்லை: நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம் - 11 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


நெல்லை: நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம் - 11 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
x

நெல்லை, இடிந்தகரை அருகே கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம் அடைந்தது.

நெல்லை:

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 1-ந் தேதி 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். படகை டிரைவர் வினி என்பவர் ஓட்டி வந்தார்.

விசைப்படகு நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த பாறை மீது மோதி அடிப்பகுதி சேதம் அடைந்தது. இதனால் படகின் என்ஜின் அறைக்குள் கடல்நீர் உட்புகுந்தது. ஆகையால் படகை மேலும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் படகில் இருந்த 11 மீனவர்களும் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். அந்த படகில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான மீன்களும் இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த இடிந்தகரை மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த மீனவர்களையும், படகில் இருந்த மீன்களையும் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து பாறையின் இடுக்கில் சிக்கிய விசைப்படகை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் படகை மீட்க முடியவில்லை. அதே நேரத்தில் படகு உடைந்து சேதம் அடைந்தது.

இதனால் படகில் இருந்த பொருட்கள் மற்றும் என்ஜின் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்ட மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story