"புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்"


புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:45 PM GMT)

“புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு எஸ்.பி. ஸ்ரீநாதா அறிவுறுத்தினாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கி போலீஸ் நிலைய வரவேற்பாளர்களின் பணி குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், போலீஸ் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் பணிவுடனும், கனிவுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும், புகார் தெரிவிக்க வரும் புகார்தாரரை அன்போடு வரவேற்று அவரது இருக்கையில் அமரச்செய்து அதன் பின் அவர்களது குறைகளை கேட்டறிய வேண்டும், புகார் மனுவை பெற்று பதிவேட்டில் பதிந்து நிலைய பொறுப்பாளரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும், அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் நிலையத்திற்கு வரும்போது காயம் ஏதும் ஏற்பட்டு இருந்தால் முதலில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவர அறிவுறுத்துவதோடு மருத்துவமனையிலேயே புகார்கள் பெறப்படும் எனவும் அறிவுறுத்த வேண்டும். மேலும் சைபர் குற்றங்கள் பற்றிய புகார்களுக்கு பொதுமக்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த 1930 மற்றும் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு புகார் தெரிவிக்க இயலாத நபர்களுக்கு தங்களது தொலைபேசியில் இருந்து புகார்களை தெரிவிக்கும்படியும், புகார் மனு எழுத தெரியவில்லை என்றால் அவரது குறைகளை கேட்டறிந்து அவர்கள் சொல்லும் நடையிலேயே புகார் மனுக்களை எழுதிக்கொடுக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவராஜ், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story