'எழில்மிகு தோற்றம், தரமிக்க கட்டிடமே பொதுப்பணித்துறையின் குறிக்கோள்' - அதிகாரிகளுக்கு, அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்


எழில்மிகு தோற்றம், தரமிக்க கட்டிடமே பொதுப்பணித்துறையின் குறிக்கோள் - அதிகாரிகளுக்கு, அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
x

எழில்மிகு தோற்றம், தரமிக்க கட்டிடம் என்பதே பொதுப்பணித்துறையின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் எ.வே.வேலு அறிவுறுத்தினார்.

சென்னை

சென்னை மண்டலத்தில் பொதுப்பணித்துறையால் பல்வேறு கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள், மணிமண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொதுப்பணித்துறையால் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடங்களையும், அவற்றின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் ஆஸ்பத்திரி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் ஆகிய கட்டிடங்களின் கட்டுமான பணிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார்.

ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி எ.வ.வேலு பேசியதாவது:-

கட்டிடங்கள் கட்டுவதில் நவீன முறைகளை கடைபிடித்து முகப்பு தோற்றம் எழில் மிக்கதாக இருக்கவேண்டும். அதற்காகவே முதல்-அமைச்சர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாணவ-மாணவியர் தங்கும் விடுதிகள், நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்கள் ஆகியவற்றின் புதிய முகப்பு தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இனிமேல், கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், இந்த முகப்பு தோற்றத்தின்படியே இருக்கவேண்டும்.

பொதுப்பணித்துறை கட்டிடங்களில் தரத்தை உறுதி செய்ய வேண்டும். "தரமே தாரக மந்திரமாக" இருக்கவேண்டும். எழில்மிகு தோற்றம், தரமிக்க கட்டிடம் என்பதே பொதுப்பணித்துறையின் குறிக்கோளாக இருக்கவேண்டும். நில எடுப்பிற்கு நிலத்திட்ட அட்டவணை தயாரிக்கும்போது தகுதியான இடத்தை தேர்வு செய்யவேண்டும். சரியான இடம் தேர்வு செய்யப்படாததால் பல இடங்களில் கட்டுமான பணி தாமதம் ஏற்படுகிறது. கோவில் நிலங்களை தேர்வு செய்யக்கூடாது.

மதிப்பீடு தயார் செய்யப்படும்போது என்னென்ன தேவைப்படுகிறதோ, அதையெல்லாம் சேர்த்து மதிப்பீடு தயார் செய்யவேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளடக்கவேண்டும். 10 சதவீதத்துக்குமேல் திருத்திய நிர்வாக அனுமதி கேட்கும் நேர்வுகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் விளையாட்டு மைதானம் இன்னும் வேலை முடிக்காமல் இன்று வரை ஒப்படைக்கவில்லை. பொறியாளர்கள் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும். பொறியாளர்கள் பணிகளின் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்னும் கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை. இந்த பணியை ஜூலை மாதம் 27-ந்தேதிக்குள் முடிக்கவேண்டும். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி தொற்று நோய் அவசர சிகிச்சை கட்டிடம் விரைவாக கட்டி முடிக்கப்படவேண்டும்.

சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு அலுவலர் குடியிருப்பு பணியினை விரைவாக முடிக்கவேண்டும். காலதாமதத்தை தவிர்த்து குறிப்பிட்ட ஒப்பந்த காலத்துக்குள் கட்டுமான பணிகளை முடிக்கவேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வதே மருத்துவத்துறையின் தலையாய பணி. அப்பணியை மேற்கொண்டு வரும் டாக்டர்களுக்கும், பணியாளர்களுக்கும் எந்தவித இடர்பாடுகளும் ஏற்படாத வண்ணம், ஆஸ்பத்திரி சார்ந்த கட்டிடங்களை சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து முடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story