இரு தரப்பினர் மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு


இரு தரப்பினர் மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு
x

இரு தரப்பினர் மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருச்சி

மோதல்

தொட்டியத்தை அடுத்த மணமேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மருதை (32). இவர்கள் குடும்பத்திற்கு இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கி, அரிவாளால் வெட்டிக்கொண்டனர். இதில் காமாட்சி (50), சுப்பிரமணியன் (30), மற்றொரு பிரிவில் நந்தினி (27), மருதை (32) ஆகிய 4 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்களை முசிறி தனியார் மருத்துவமனையிலும், தொட்டியம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதை அடுத்து காமாட்சி, நந்தினி ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் மருதை (32), அருணாச்சலம் (21), செந்தில் (35), சுப்பிரமணியன் (55), நந்தினி (27), வள்ளியம்மை (50), மற்றொரு பிரிவில் சுப்பிரமணியன் (32), துரைமுருகன் (25), ராஜேந்திரன் (52), அண்ணாதுரை (55), ராஜன் (47) ஆகிய 11 பேர் மீது தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஜாமீனில் வந்தவர் கைது

*மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி அருகே உள்ள சீத்தபட்டியை சேர்ந்தவர் கார்த்தி(25). பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த இவர், தனது தந்தையிடம் கடை வைத்து தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சலில் கார்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஆலம்பாளையம் புதூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த சரவணனின் மகன் பிரபு(29). இவர் கடந்த ஆண்டு தனது வீட்டில் ஒன்றரை பவுன் நகை திருட்டு போனது சம்பந்தமாக அளித்த புகாரின்பேரில், அதே ஊரை சேர்ந்த சின்னசாமி மகன் சொக்கன் என்ற சொக்கலிங்கம் (29) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், பிரபுவை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை கைது செய்தனர்.

வெல்டர் பலி

*சமயபுரம் அருகே உள்ள மேல கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் ஜான்சன்(35). வெல்டரான இவர் நேற்று வாளாடியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார்.

*முசிறியை அடுத்த சோளம்பட்டி நோக்கி தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ்(35) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது தா.பேட்டையில் இருந்து முசிறி நோக்கி ஆனைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா(27) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

*கல்லக்குடியை அடுத்த மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(36). இவருக்கும், துறையூரை சேர்ந்த நதியா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று குழந்தை உள்ளது. பின்னர் நதியா கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன் துறையூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மரத்தில் தூக்குப்போட்டு ஆரோக்கியராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

*திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஸ்போர்ட் மாயம்

*திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (46) என்பவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்றபோது விருதுநகர் மாவட்டம் கல்லூர் சந்தை பகுதியை சேர்ந்த யோதீஷ்வரன் (36) என்பவர் பாலசுப்பிரமணியன் சட்டை பையில் இருந்து ரூ.300 பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் யோதீஷ்வரனை கைது செய்தனர்.

* ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோசி மாரி பர்போசா டாசில்வ குருஸ் (54) என்பவர் தங்கியிருந்தார். இவர் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story