அனைத்து பணிகளுக்கும் பிறப்பு - இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது


அனைத்து பணிகளுக்கும் பிறப்பு - இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது
x

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசு பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்து பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

சட்ட திருத்தம்

அதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும்.

அதில், மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும்.

அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்பு சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும்.

அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும்.

அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

பொதுமக்கள் கருத்து

பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல், குடும்ப தலைவி, கல்லூரி மாணவி மற்றும் தனியார் நிறுவன ஊழியர் ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

வரவேற்பு



தனியார் நிறுவன ஊழியர் ரத்தின பிரகாஷ்:- முன்பெல்லாம் வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளை கையாளுகையில் நிறைய சங்கடங்கள் இருந்தன. விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து, வரிசையில் நின்று அந்த பணத்தை எடுப்பதிலும், போடுவதிலும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டுவிடுவோம். ஏ.டி.எம். எந்திரங்கள் வந்தபிறகு இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. தற்போது கையடக்க செல்போனில் இருந்து நொடிப்பொழுதில் பண பரிவர்த்தனை செய்துகொள்ளும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டது. அதேபோன்று இந்த திட்டமும் மக்களுக்கு நிச்சயம் அலைச்சலையும், கால விரயத்தையும் தவிர்த்து நிம்மதி அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இதுபோன்ற மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை காலதாமதம் இல்லாமல் விரைவில் நடைமுறைப்படுத்தினால் சாலச்சிறந்தது. எனவே நிச்சயம் இது வரவேற்கத்தகுந்த திட்டம் என்பதில் சந்தேகமே கிடையாது.

குறைகளை சரி செய்ய வேண்டும்



கல்லூரி மாணவி சுமித்ரா:- ஆரம்ப காலத்தில் பிறப்பு சான்றிதழை தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று கால்கடுக்க காத்திருந்து வாங்கவேண்டியதாக இருந்தது. இதில் நேர விரயமும், அலைச்சலும் ஏற்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்துமே ஆன்லைன் என்ற வரிசையில் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுவதும் இணைந்துவிட்டது. இது வசதியாக இருக்கிறது. எனினும், இந்த சான்றிதழை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் சில ஊழியர்கள் காலதாமதம் செய்கிறார்கள். வேண்டுமென்றே சில குறைபாடுகளை சொல்லி நேரில் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் உள்நோக்கமும் இருக்கிறது. இந்த குறைபாடுகளை நிச்சயம் சரிசெய்ய வேண்டும். அரசு என்னதான் எளிமையான தொழில்நுட்பத்தை புகுத்தினாலும் அதில் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. எனவே முதலில் குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு, இந்த திட்டத்தை எளிமையான முறையில் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் பாராட்டுக்குரியதாகவும், வரவேற்கத்தகுந்த திட்டமாகவும் இருக்கும்.

ஏமாற்றம் தவிர்க்கப்படும்



குடும்ப தலைவியான பூங்கொடி:- வாக்காளர் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பாஸ்போர்ட் வாங்குவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது தான். அரசு சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் முறையாக பதிவு செய்யப்படுவதன் மூலமாக போலிகளை தவிர்க்கலாம். இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களால் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும்.

தேவை இல்லாத ஒன்று



சென்னை ஐகோர்ட்டு வக்கீல் மைக்கேல் ஜேக்கப் டென்னிசன்:- பொதுவாக ஒரு சட்டத்தை திருத்தும்போது, அதில் பெருவாரியான மக்கள் பயன்பெற வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த சட்ட திருத்தம் வெற்றி பெற்றதாக கருதப்படும். நமது நாட்டில், நகர்ப்புறங்களை காட்டிலும், கிராமப்புறங்களில் அதிகமானோர் வசிக்கின்றனர். அவர்கள் இந்த சட்ட திருத்தத்தால் பயன் பெறமுடியுமா? என்பதில் சந்தேகம் தான். அதற்குண்டான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஏனெனில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் பதிவு செய்வதில் அவர்களுக்கு சரியான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், பதிவு செய்யமுடியாத நிலை ஏற்படலாம். அதனால் இந்த சட்ட திருத்தம் தேவை இல்லாத ஒன்று.

சட்டம் என்ன சொல்கிறது?

மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் முக்கியமானதாகும். இதற்காக, மத்திய அரசு கடந்த 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் உருவாக்கப்பட்டன. அதில், கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு நடந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் கிடையாது.

22-வது நாள் முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்வதற்கு தாமத கட்டணம் ரூ.100-ம், 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்வதற்கு ரூ.200-ம், ஓராண்டுக்கு மேல் பதிவதற்கு ரூ.500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், கூடுதல் நகலுக்கு தலா ரூ.200-ம் கட்டணமாக உள்ளது.

இந்தியாவில் பிறப்பும், இறப்பும்

சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 2 கோடியே 69 லட்சத்து 32 ஆயிரத்து 586 பிறப்பு நிகழ்கிறது. பிறப்பு விகிதம் 17.16 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக இருக்கிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 73 ஆயிரத்து 787 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 3 ஆயிரத்து 74 பேரும், ஒரு நிமிடத்துக்கு 51 பேரும் இந்தியாவில் புதிதாக அவதரிக்கிறார்கள்.

அதேபோல, இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 97 லட்சத்து 78 ஆயிரத்து 73 இறப்புகள் நிகழ்கிறது. இறப்பு விகிதம் 7.3 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக உள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 26 ஆயிரத்து 789 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 1,116 பேரும், ஒரு நிமிடத்துக்கு 19 பேரும் இந்த பூலோக வாழ்வை நீத்து, உயிர் துறக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய மக்கள் தொகையைவிட இந்தியாவில் ஓர் ஆண்டில் பிறப்பவர் எண்ணிக்கை அதிகம்

உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 800 கோடியை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதில், இந்தியாவினுடைய பங்களிப்பு மட்டும் 141 கோடியே 20 லட்சத்தையும் தாண்டி நிற்காமல் செல்கிறது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி, ஆஸ்திரேலிய நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 2 கோடியே 69 லட்சம் பேர் புதிதாக பிறக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விடவும், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பிறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.


Next Story