பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் சோளிங்கரில் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் கண்ணன் பாலகணபதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பிரமிளா சம்பத், மாநில ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்தர மருத்துவமனை வசதிகளை அரசு ஏற்படுத்தி தந்திட வேண்டும், மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிக அளவில் பரவி உள்ளது. குறிப்பாக இளம் பருவ மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் இதனை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்காடு-ஆரணி புதிய பைபாஸ் சாலை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் கிடப்பில் உள்ளது அரசு உடனே கவனத்தில் கொண்டு புதிய சாலை அமைத்திட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய ஊதியம் முழுமையாக சென்று அடைவதில்லை. அரசு தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைப் பகுதிகளில் கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, மகளிர் அணி துணை தலைவர் கிருஷ்ணசாந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், சோளிங்கர் ஒன்றிய தலைவர் பாரதி, வழக்கறிஞர் சீனிவாசன் உள்பட மாவட்டத் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சோளிங்கர் நகர தலைவர் சேகர் நன்றி கூறினார்.


Next Story