'இந்தியா' கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு அச்சம் -டி.ராஜா பேட்டி


இந்தியா கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு அச்சம் -டி.ராஜா பேட்டி
x

‘இந்தியா' கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு அச்சம், பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று டி.ராஜா கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது 'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்று சொல்கிறார்கள். வருங்காலத்தில் 'ஒரு நாடு ஒரு கட்சி', 'ஒரு நாடு ஒரு தலைவர்', என்ற நிலைக்கு போக கூடிய அபாயம் இருக்கிறது. இதுதான் சர்வாதிகாரம். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது ஏற்புடையது அல்ல. இதை செயல்படுத்த முடியாது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஏற்பதாக இல்லை. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கவில்லை.

இந்தியாவின் பொருளாதாரம் மிக பெரியளவில் வளர்ந்திருக்கிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்கிறார். ஆனால் இன்றைக்கு பொருளாதாரம் நிலைக்குலைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. இதற்கு எல்லாம் மோடியின் ஆட்சியில் பதில் எதுவும் இல்லை.

மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

நாட்டை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். பா.ஜ.க. ஆட்சியை அகற்றவேண்டும் என்ற குறிக்கோளோடு 'இந்தியா' என்ற கூட்டணி உருவாகி இருக்கிறது. இதனால் பா.ஜ.க.வுக்கு அச்சம், பதற்றம் ஏற்பட்டுள்ளது. சனாதன விவகாரத்தை பா.ஜ.க.தான் பிரச்சினையாக்கி உள்ளது. சனாதனத்துக்கான எதிர்ப்பை ஒரு மதத்துக்கான எதிர்ப்பு போன்று திசை திருப்பி உள்ளனர்.

சனாதனம் என்றால் என்ன என்பதை மக்கள் மன்றத்தில், மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் விவாதிக்க தயாரா? சனாதனம் என்பது சாதி கோட்பாட்டை, பெண்ணடிமையை நிலைநிறுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை ஆகும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய கண்ணியத்துடன், மரியாதையுடன், பொறுப்புடன் தனது கருத்துகளை முன்னெடுத்து வருகிறார். இது பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலை மறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், 'விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் தமிழகம் தழுவிய அளவில் மறியல் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் சென்னை பாரிமுனையில் உள்ள தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெறும்' என்றார்.


Next Story