ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது; முதல்-அமைச்சர் அறிக்கை


ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது; முதல்-அமைச்சர் அறிக்கை
x

23-ந்தேதி தீர்ப்பு, 24-ந்தேதி பதவி பறித்துள்ளதாகவும், ராகுல்காந்தியை பார்த்து பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை.

ராகுல் காந்தி பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில், சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்திக்கு வழங்கி இருக்கிறார். 'வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன்' என்றும் சொல்லி இருக்கிறார்.

பா.ஜ.க. பயந்து இருக்கிறது

மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார். அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்திவிடவில்லை.

மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதி தீர்ப்பை வழங்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டு ஆகும். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23-ந்தேதி தீர்ப்பு, 24-ந்தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு. ராகுல் காந்தியை பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது. அவரது இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இதற்குக் காரணம் ஆகும்.

திரும்ப பெறவேண்டும்

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை மத்திய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை. மீண்டும் அவரை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்துள்ளார்கள். இந்த தகுதி நீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்சொல்லாமல், கேள்வி கேட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல. இந்த நடவடிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story