தென்னங்கன்றுகளை ஏந்தி பா.ஜனதா போராட்டம்


தென்னங்கன்றுகளை ஏந்தி பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2023 7:15 PM GMT (Updated: 5 Jan 2023 7:16 PM GMT)

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்களுடன் தேங்காய் வழங்கக்கோரி தென்னங்கன்றுகளை ஏந்தி பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் ராஜகோபால், செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் திருமலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா விவசாய அணியினர் கையில் தேங்காய், தென்னங்கன்றுகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். அப்போது தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதற்காக விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன்கடைகளில் பொங்கல் பொருட்களுடன் தேங்காயை சேர்த்து வழங்க வேண்டும். அதேபோல் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.





Next Story