காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம்


காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

காங்கிரஸ் கட்சியின் தேசிய மீனவர் அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:- ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்துள்ளது. மத்திய அரசு பலவீனமாக இருப்பதால்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலும் தொடர்கின்றது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 200 தமிழக மீனவர்களின் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 140 படகுகளை இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுடைமையாக்கப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசுடைமையாக்கப்பட்ட படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் திரளாக கலந்து கொள்ள உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story