திருவொற்றியூரில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக ஆணழகன் போட்டி


திருவொற்றியூரில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக ஆணழகன் போட்டி
x

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம் சார்பில் திருவொற்றியூரில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக மிஸ்டர் கிளீன் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

சென்னை

போட்டியை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆணழகன்கள், ஊனமுற்றோர், முதியவர்கள் உள்ளிட்டோர் தங்கள் பெயர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் தங்கள் தனி திறமையை வெளிப்படுத்தினர். இதில் 2 ஊனமுற்றவர்கள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பதக்கம் வென்றனர். ஆணழகன் போட்டியில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் வென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரியா ஜிஜோ, சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். 2-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் வென்றார். இவர்களுக்கு கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, டாக்டர் செல்வராஜ்குமார், நடிகர்கள் மகாநதி சங்கர், பப்லு, தீனா, ரோபோ சங்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் உதவி கமிஷனர் முகமது நாசர், இன்ஸ்பெக்டர் காதர் மீரா, கிருஷ்ணராஜ், கோபி, சப்-இன்ஸ்பெக்டர் முகமது இர்பான் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story