வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுப்பு


வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 18 Oct 2023 7:30 PM GMT (Updated: 18 Oct 2023 7:31 PM GMT)

முதுமலை வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கும் பணி கூடலூர் தொரப்பள்ளியில் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் 130 கிலோ வரை யானைகளின் உடல் எடை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் இருந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மூர்த்தி என்ற வளர்ப்பு யானை உடல்நலன் பாதித்து உயிரிழந்தது. தற்போது 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் கணக்கெடுத்து ஆய்வு செய்வது வழக்கம்.

இதில் உடல் எடை குறைந்த யானைகளை கண்டறிந்து கூடுதல் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வளர்ப்பு யானைகளின் உடல் எடை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கோடை கால வறட்சியால் போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலை இருந்ததால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை பரவலாக குறைந்து காணப்பட்டது.


இந்த நிலையில் முதுமலையில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் நேற்று கணக்கெடுத்தனர். இதற்காக முதுமலையில் இருந்து கூடலூர் தொரப்பள்ளிக்கு வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்பட்டது. பின்னர் வனத்துறையின் எடை மையத்தில் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.

தெப்பக்காடு வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் சங்கர், முதுமலை, சுஜய், சேரன், ரகு, மசினி, கிரி, செந்தில் வடிவு உள்பட 15 வளர்ப்பு யானைகளின் உடல் எடை சரிபார்த்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலத்தை விட தற்போது வளர்ப்பு யானைகளின் உடல் எடை சராசரியாக 130 கிலோ வரை அதிகரித்துள்ளது. மஸ்து உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story