ராமநாதபுரத்தில் புத்தக கண்காட்சி


ராமநாதபுரத்தில் புத்தக கண்காட்சி
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் புத்தக கண்காட்சியை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் புத்தக கண்காட்சியை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.

புத்தக கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று காலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த புத்தக கண்காட்சியில் 114 அரங்குகள் அமைக்கப்பட்டு 2 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அரசின் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான அரங்குகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பார்த்து படித்து பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள், மூலிகை கண்காட்சி, ஓவிய கண்காட்சி, மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது என்றார்.

நடமாடும் நூலகம்

புத்தக கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:- மாணவர்கள், இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் புத்தக கண்காட்சி 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவிகளுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் மூலம் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு செயல்பட உள்ளது என்றார்.

தொடர்ந்து புத்தக திருவிழாவையொட்டி நடைபெற்ற வாசகர்கள் போட்டியில் தேர்வுசெய்யப்பட்ட மேனகா என்பவருக்கு பாராட்டுசான்று மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, நேர்முக உதவியாளர் சேக்மன்சூர், ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவின் தங்கம், வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்க தலைவர் சின்னத்துரை அப்துல்லா, துணைதலைவர் வான்தமிழ் இளம்பரிதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story