ஏரியில் மூழ்கி சிறுவன் பலி


ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:45 PM GMT)

பெண்ணாடம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.

கடலூர்

பெண்ணாடம்

ஆடு மேய்க்கும் பணி

திருச்சி மாவட்டம் தங்கமாம்பட்டியை சேர்ந்தவன் சக்திவேல் மகன் சிவா (வயது 17). இவன் மற்றும் அரியலூர் மாவட்டம் பள்ளி விடை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் தன்ராஜ் (16) மற்றும் ரூபன் (16) ஆகியோர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்து ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இவர்கள் 3 பேரும் அரியராவி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஏரியை பார்த்ததும், சிறுவர்கள் 3 பேருக்கும் ஏரியில் இறங்கி குளிக்க ஆசை ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் ஏரியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சிவா, மட்டும் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற 2 பேரும் கிராமத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

இதையடுத்து கிராமத்தில் உள்ள இளைஞர்கள் விரைந்து வந்து ஏரியில் இறங்கி சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிவா பிணமாக மீட்கப்பட்டான்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story