10-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி வாலிபர் போக்சோவில் கைது


10-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி வாலிபர் போக்சோவில் கைது
x

10-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் முருகன் (வயது 29). இவர் கடந்த 2-ந் தேதி இரவு பல் வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக நிறுத்தத்தில் காத்திருந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது முருகன் அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி வந்து இதுகுறித்து செல்போன் மூலம் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கைதான முருகன் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story