நாமக்கல் பெரியூர் பகுதியில்குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சாலையில் தேங்குவதால் பொதுமக்கள் அவதி


நாமக்கல் பெரியூர் பகுதியில்குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்   சாலையில் தேங்குவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 24 Oct 2023 7:00 PM GMT (Updated: 24 Oct 2023 7:01 PM GMT)

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பெரியூர் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பெரியூர் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

குழாயில் உடைப்பு

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் பெரியூர் உள்ளது. இந்த பகுதியின் வழியாக நாமக்கல் நகராட்சிக்கு புதிதாக அமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் புதிய குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. பெரியூரின் மத்திய பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி, சத்துணவு கூடம், விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் போன்றவை அமைந்துள்ள 4 ரோடு உள்ளது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகளும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

உடனடி நடவடிக்கை

இதேபோல் பெரியூர் 4 ரோட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையிலும், நத்தமேடு செல்லும் சாலையிலும் குளம்போல் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.

எனவே பெரியூரின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய பாதையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் குழாய் உடைப்பு சரி செய்யப்படும் என்றனர்.


Next Story