லாரி சக்கரத்தில் சிக்கி தரகர் பலி; சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது பரிதாபம்


லாரி சக்கரத்தில் சிக்கி தரகர் பலி; சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது பரிதாபம்
x

திருவள்ளூர் அருகே நில தரகர் சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது லாரியை பின்னோக்கி இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

திருவள்ளூர்

தரகர் பலி

பூந்தமல்லி அடுத்த செட்டிபேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் குப்பம் அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு கீழே உட்கார்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

மனோகரன் அமர்ந்து இருந்த பக்கத்தில் லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. மனோகரன் இருப்பதை கவனிக்காமல் லாரியை டிரைவர் பின்பக்கமாக இயக்கியதாக கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் சக்கரம் கீழே உட்கார்ந்து இருந்த மனோகரன் மீது ஏறியது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்தியன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு சம்பவம்

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரை சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசபெருமாள் (30). இவர் நேற்று முன்தினம், செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி லாரியை ஓட்டி சென்றார். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், பஞ்செட்டி அருகே செல்லும் போது, அதே திசையில் முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் போட்டதால், அந்த லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக சீனிவாச பெருமாள் ஓட்டிச் சென்ற லாரி மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த லாரி டிரைவர் சீனிவாசபெருமாள், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story