நாமக்கல் கலெக்டருக்கு வெண்கலப்பதக்கம்


நாமக்கல் கலெக்டருக்கு வெண்கலப்பதக்கம்
x

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்தியமைக்காக நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெண்கலப்பதக்கம் வழங்கினார்.

நாமக்கல்

வெண்கல பதக்கம்

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியமைக்காக சிறந்த கலெக்டருக்கான 3-ம் பரிசு வெண்கலப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை அதிகரித்தல், மாவட்ட அளவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பினை குறைத்தல், மாவட்டத்தின் கருக்கலைப்பு விகிதத்தினை குறைத்தல், 1994-ம் ஆண்டுக்கு முன் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள் சட்டம் மாவட்டத்தில் வலுவாக செயல்படுத்தப்பட்டு பரிசோதனை மையங்கள் தொடர் கண்காணிப்பில் இருத்தல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களில் அதிக அளவு பயனாளிகளை பயன்பெற செய்தல்,

பெண் குழந்தைகளின் பாலின விகிதம் உயர்வு

மாவட்ட அளவில் பெண் சிசு கொலையை தடுத்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலையினை ஏற்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதும் நிகழாமல் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்தி சிறப்பாக செயலாற்றியமைக்காக நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 3 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினவிழாவில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு வெண்கலப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டு பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் 941 ஆக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 953 ஆக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story